அண்ணாமலை மீது நானும் வழக்கு தொடருவேன்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்




சென்னை: தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்களின் சொத்து பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும். 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும், 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு தானும் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார். அண்ணாமலை வெளியிட்டு இருந்த சொத்து பட்டியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரும் இடம் பெற்று இருந்தது. 2008 முதல் 2011 வரை ரூ.300 கோடிக்கு படம் எடுத்துள்ளார். அதில் நிறைய படங்கள் தோல்வியும் அடைந்துள்ளது. அப்படியிருக்கும் அவரது பட தயாரிப்பு நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2,010 கோடியாக எப்படி உயர்ந்தது என்றும் அவருக்கு ரூ.2,039 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவரிடம் அண்ணாமலை கூறி உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:- அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். தி.மு.க. மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம் என்றார்.