டிசம்பர் 27-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு




சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். அனைத்து சார்பு அணிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். நியமனம் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.