234 எம்.எல்.ஏ. அலுவலகங்களில்
இ-சேவை மையங்கள்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்



தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கிடும் அடையாளமாக 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினிடம் நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச் சொல்லை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்தின் அருகாமையிலேயே வழங்குகின்றன. இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி மக்கள் இணைய வழி சேவைகளை பெறு வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு முதன் முறையாக காகிதமில்லா சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. அதற்கென சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நவீன மேசைக் கணினிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற பேரவைச் செயலகத்துறை சார்பாக மாநிலத்தின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைப்பதற்காக அந்நவீன மேசை கணினிகள் வழங்கப்படுகின்றன. இக்கணினிகளை பயன்படுத்தி இ-சேவை வலைத்தளத்திலிருந்து (tnesevai.tn.gov.in/Default.aspx) இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.