மாந்தாங்கல் கிராமத்தில்
 முதலாவது இயற்கை எரிவாயு நிலையம்:
 முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்



சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 222 பகிர்மான நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியினை 8 வருடங்களில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது, "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது. இந்த எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இரண்டு 56 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கிடங்கு, ஆவியாக்கி எந்திரம் மற்றும் உயர் அழுத்த பம்ப் அமைத்து உள்ளது. இதன்மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும் 30 ஆயிரம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனத்தினால் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளீதரன், "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தலைவர் அபிலேஷ் குப்தா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் "ஏ.ஜி.&பி. பிரதம்" நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.