வண்டலூரில் பசுமை தமிழகம் இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்



சென்னை: தமிழக வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தினை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பளவு 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க இந்த திட்டத்தை அரசு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக வண்டலூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்டலூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.