எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு வழங்கி தனது செல்வாக்கை உறுதிப்படுத்திய சி.வி.சண்முகம்..!



அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக, பொதுக்குழு, செயற்குழு மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சென்னையில் கட்சி நிர்வாகிகளின் வரவேற்பையையும், மரியாதையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு சாலை மார்க்கமாக சேலம் செல்வதற்கு தயாரான பொழுது விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் என்ற முறையில் திண்டிவனத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய சி.வி.சண்முகம் மக்கள் வெள்ளத்தில் நீந்த வைத்து சிலமணிநேரம் போக்குவரத்தை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் எடப்பாடியை ஆழ்த்தியுள்ளார். இப்படி ஒரு பிரமாண்ட வரவேற்பு வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டத்தில் எடப்பாடிக்கு வழங்கப்பட்டு இருப்பது பல கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தி தந்துள்ளார் சி.வி.சண்முகம். எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள், இளைஞர்கள் கூட்டம் திக்குமுக்காடிய எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்களே தவிர திமுகவால் ஒருகாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க இயலாது என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வருவதற்கு தொண்டர்கள் ஆகிய உங்களுக்கு கடின உழைப்பும், ஆதரவும் உங்களில் ஒருவனான எனக்கு தேவை. அது இருக்கிறது என்பதை இந்த கூட்டம் நிரூபித்து காட்டியுள்ளது என்று உணர்ச்சி உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சி.வி.சண்முகம் மிக பிரமாண்டமான கூட்டத்தை கூட்டி திண்டிவனம் விழுப்புரம் மாவட்டத்தை திக்குமுக்காட செய்துள்ளார். இதுபோன்ற ஒரு வரவேற்பு வன்னியர் பகுதிகளில் கிடைத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் எதிர்வரும் சு0சு4 ஆம் ஆண்டு நடைபெற போகும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி அமோக வெற்றிப்பெறும் என்பதை உறுதியாக நம்புகிறார். ஒற்றை தலைமைக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சியும் வரவேற்பும் கிடைத்திருப்பதை பார்க்கும் பொழுது பொதுமக்கள் ஆதரவும் செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காலங்களில் நல்ல பலனை தரும் என்பதற்கு அறிகுறியாகவும் விழுப்புரம் மாவட்ட வரவேற்பு அமைந்துள்ளது. இதனை பார்க்கும் பொழுது வடமாவட்டங்களில் மிகப் பெரிய ஆதரவு அலை அதிமுகவிற்கு உள்ளது என்பதை உறுதியாக கூறமுடியும். ஒ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவு முற்றிலும் வடமாவட்டங்களில் இல்லை என்பதையும் இந்த விழுப்புரம் மாவட்ட வரவேற்பு நிகழ்ச்சி நினைவுப்படுத்துகிறது.

- டெல்லிகுருஜி