தமிழ்நாட்டில் 20 புதிய கலைக்கல்லூரிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்



சென்னை: 2021-22-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின்போது, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோன்று, 2022-23-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள்; சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடம், சென்னை, அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 7 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ, மாணவியர்க ளுக்கான விடுதிக் கட்டிடங்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள உடற்பயிற்சிக் கூடம் உள்பட பல்வேறு ஊர்களில் மொத்தம் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.