தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்


   


சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்-அமைச்சர் அசோக் கெலாட், 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இதன் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

இந்தியாவில் 1.1.2004 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. மத்திய அரசுக்கு முன்பே தமிழ்நாட்டில் 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் அங்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது.

மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் புதிய ஓய்வூதிய முறைக்கு மாறிவிட்ட நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று பலரும் கூறி வந்த நிலையில், அது சாத்தியம் தான் என்று ராஜஸ்தான் அரசு நிரூபித்திருக்கிறது.

தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2004ஆம் ஆண்டிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று ராஜஸ்தான் அரசு நிரூபித்து விட்ட நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சாந்தாஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி மூத்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 2018ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்ட 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பலர் ஓய்வூதியம் கிடைக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இனியும் அரசு ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.