சென்னை புத்தக கண்காட்சி
தமிழக அரசு அனுமதி
பிப் 16-ம் தேதி தொடக்கம்



ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்படும் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குகளுக்கான பணிகள் எல்லாமும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நூல்களை சென்னைக்கு தருவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு பலத்த பொருளாதார சிக்கலை உண்டாக்கியிருந்ததை வலியோடு பதிவு செய்தனர்.


ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி தான் புத்தகங்களுக்கான மிகப்பெரும் சந்தையாக திகழ்கிறது. இதையொட்டி ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்படும். அந்த வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் ஜனவரி 6 முதல் நடைமுறைக்கு வந்தன. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புத்தக காட்சி நடைபெறுமா என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு புத்தக கண்காட்சியை நடத்திக் கொள்ள தற்போது அனுமதி அளித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக ஆர்வலர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக அமைகிறது.