முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு



புதுச்சேரி: மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பர புதுவை பிரிவு சார்பில் ரோசம்மா திருமண நிலையத்தில் 'பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்' கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அறியப்படாத சுதந்திரப் போராட வீராங்கனைகள் பற்றிய படக்காட்சிகளையும், அரங்குகளையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் தெற்கு மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், சென்னை, பத்திரிகை தகவல்தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, சமூக நலத்துறைச் செயலர் உதயகுமார், புதுவை களவிளம்பரப் பிரிவின் துணை இயக்குனர் சிவகுமார், பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதி, மத்திய கலாச்சார அமைச்சகம் மாலதி செல்வம், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் குழந்தைகளுக்கான ரூ 50 ஆயிரம் காப்பீட்டுத் திட்டம், சமையல் எரிவாயு மானியம் ரூ. 300 மற்றும் உலகத் தமிழ் மாநாடு புதுவையில் நடத்துவதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்ததற்காக முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.