25 புத்தொழில் நிறுவனங்களுக்கு
தலா ரூ.5 லட்சம் மானியம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்



சென்னை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (30.12.2022) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், பசுமைத் தொழில் நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினை வெளியிட்டார். மேலும், 25 நிறுவனங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதியினை வழங்கி, தொழில் முனைவோர்களுக்கான "வழிகாட்டி மென்பொருள்" தளத்தினை தொடங்கி வைத்தார்.

தற்போது, டான்சீட் 4-வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 1029 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. பல கட்டமாக நடைபெற்ற மதிப்பீட்டு பணிக்கு பின்பு முதற்கட்டமாக பசுமை தொழில் நுட்பம் சார்ந்து இயங்கும் 7 நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் 8 நிறுவனங்கள் மற்றும் பெண்களை நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களாக கொண்டிருக்கும் 10 நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 1.25 கோடி ரூபாய் மானிய நிதியினை வழங்கினார். நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர் அருண்ராய், சிவராஜா ராமநாதன் கலந்து கொண்டனர்.