ஊட்டியில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஊட்டியில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை பார்வையிட்ட அவர் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார்.

மேலும் கண்காட்சியை யொட்டி நடந்த பரத நாட்டியம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியையும் அவர் கண்டு ரசித்தார்.

மாலையில் ஊட்டி விருந்தினர் மாளிகையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று, அங்குள்ள ராணுவ போர்சின்னத்திற்கு மரியாதை செய்தார். அவருக்கு, கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சி முறை குறித்து வீடியோவாக காண்பிக்கப்பட்டது.

ஊட்டியில் ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் முக்கோண சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டியின் முதல் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஊட்டி 200-வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து 9,500 பயனாளிகளுக்கு, ரூ.28 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேரூரையாற்றினார்.

நடந்த விழாவில் மட்டும் மொத்தம் ரூ.118 கோடியே 79 லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டி 200-வது ஆண்டு விழா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து விழா அரங்குக்கு சென்ற முதல்-அமைச்சர் அங்கிருந்த மாற்று திறனாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், குறும்பர் பழங்குடியினர் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து ஊட்டி 200-வது ஆண்டு விழா மலர் மற்றும் ஜான் சல்லிவன் பற்றிய கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.