எல்.ஐ.சியின் எதிர்காலம்…?





இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் மிகப் பெரிய சாதனையாக எல்ஐசியை சொல்லலாம். 1947-ல் இந்தியாவின் மக்கள் தொகை 34 கோடியே 60 லட்சம். நாட்டு மக்களின் சராசரி தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.250 தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை வெறுமனே 12 சதவீதம் தான்.

உலகத்தின் மிக மிக ஏழை நாடுகளில் ஒன்றாகத் தான் அன்றைக்கு இந்தியா இருந்தது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்தார் நேருஜி. இன்சூரன்ஸ் (ஆயுள் காப்பீட்டின்) அவசியத்தை மக்களுக்குப் புரியவைக்க வேண்டியது முக்கியம் என்று நினைத்த நேரு, 1956 ஆம் ஆண்டு தனியார் காப்பீடு போன்ற காப்பீட்டு கம்பெனிகளை தேசிய மயமாக்கினார். உண்மையில் சொல்லப்போனால், எல்ஐசி பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. பல பெண்கள் எல்ஐசி முகவர்கள் ஆனார்கள். அதன் மூலம் வருமானம் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

அந்த காலத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தன. எல்ஐசி முகவர் ஆவதற்கு பள்ளிக் கல்வியே போதுமானதாக இருந்தது. பாலிசிதாரர்களை எல்ஐசி படிப்படியாக வளர்ந்து சுமார் 30 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டதாகவும் அதன் முழு சொத்துமதிப்பு ரூ.38 லட்சம் கோடி என்கிற அளவுக்கு பிரம்பாண்டமாக வளர்ந்து இருக்கிறது.

2000 ஆம் ஆண்டு தான், மீண்டும் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை தனியார் துறைகளும் பங்கு பெறலாம் என இந்திய அரசு அனுமதித்தது. ஏறக்குறைய 65 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறது. இன்றைக்கு சு0&க்கும் மேற்பட்ட தனியார்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகள் நம் நாட்டில் இயங்கி வருகின்றன. பல கம்பெனிகள் அன்னிய காப்பீட்டுக் கழகங்களோடு சேர்ந்து பங்குதாரர்களாக இருக்கின்றன.

ஆயுள் காப்பீட்டு வியாபாரத்தைப் பொறுத்தவரையில் எல்ஐசிக்கு மாத்திரம் 75 சதவிகிதம் பங்கு இருக்கிறது. எல்ஐசி பாலிசி முதிர்ச்சி அடைந்தவுடன், பாலிசிதாரர்களுக்கு சேரவேண்டிய தொகை, மிகுந்த சிரமமின்றி முறையாக போய்ச் சேருகின்றது. சுமார் 12 லட்சம் எல்ஐசி முகவர்கள் உள்ளார்கள். இதில் பல பேர் பெண்கள் குடும்பத்தலைவியாக இருந்து கொண்டே எல்ஐசி முகவர் தொழிலையும் செய்து சம்பாதித்து சாதனை படைத்து வருகிறார்கள்.

பாலிசிதாரர்களின் பலப்பல தேவைகளை பூர்த்தி செய்யும் உண்மை, சிறந்த பாலிசிகளை வடிவமைத்து வாடிக்கைதாரர்களுக்கு வழங்கி நற்பெயர் எடுத்து வருகிறது. இந்திய இளைஞர்களின் திறமை ஆற்றலை மேம்படுத்திட மோடி அரசாங்க பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. எல்ஐசியின் பயிற்சி திட்டங்கள் முன் மாதிரியாக திகழ்ந்த வருகிறது. எல்ஐசி என்பது மக்களின் வியர்வையால் தண்ரொல் வளர்ந்து ஓங்கி நிற்கும் ஆலமரம். அந்த எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலமாக நடுத்தர மக்களின் நம்பிக்கையாக விளங்கும் எல்ஐசிக்கு ஆபத்தாக இருக்குமா என்ற அச்சம் இந்தியர்களுக்கு இருக்கிறது.

மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய வரலாற்று கட்டாயம் மத்திய அரசுக்கு இருக்கிறது. தனி உடைமையின் காவல் தெய்வமாக விளங்கும் மாண்புமிகு பாரத பிரதமர் மோடியின் அரசு அதை செய்யுமா? மோடி ஆட்சியின் தனியுடைமை கொள்கைகளை எல்ஐசியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும், பல லட்சக்கணக்கான முகவர்களும் எல்ஐசி ஊழியர்களும், அச்சத்தோடு பார்த்து வருகிறார்கள்.

- பொற்கோ