ஒரே லிங்க வடிவில்
காட்சி தரும் மும்மூர்த்திகள்



அழகிய சிற்பங்களை காணவும், தாணுமாலயனை தரிசிக்கவும் உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினம், தினம் வருகிறார்கள்.

தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) ஆகியோர் இணைந்த உருவமே தாணுமாலயன். மும்மூர்த்திகளும் ஒரே உருவில் அருள்புரியும் ஈசனை வழிபட்டால் நம் வாழ்வும், நம் சந்ததியினர் வாழ்வும் ஒளிமயமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இம்மும்மூர்த்திகளும் ஒரே லிங்கத்தில் ஐக்கியமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமே சுசீந்திரம்.

நாகர்கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கன்னியாகுமரிக்கு செல்லும் மெயின் ரோட்டில் சுசீந்திரம் அமைந்துள்ளது. இங்கு தான் தாணு மாலயன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. முழுக்க, முழுக்க கல்லால் ஆன இந்த கோவிலை சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், திருமலைநாயக்கர் மன்னர்களும் தங்கள் கடுமையான முயற்சியால் 200 வருடங்களாக சிறிது, சிறிதாக கட்டி முடித்துள்ளனர்.

இந்த கோவிலில் பல்வேறு ஆச்சர்யங்களும், அற்புதங்களும் நிறைந்து இருக்கிறது. இங்கு குடிகொண்டுள்ள தாணுமாலய சுவாமியின் தலபுராணமும், அந்த பகுதியில் காணப்படும் நினைவுச்சின்னங்களும் இதனை உணர்த்துகின்றன.

தேவர்களின் தலைவன் இந்திரன் இங்கு வந்து புனிதம் அடைந்ததால் இவ்வூருக்கு சுசீந்திரம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலின் சுற்றுப்புறச்சுவரும், வானுயர்ந்து நிற்கும் ராஜகோபுரமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. கோவிலின் முன் எப்போதும் நீர் நிறைந்து வற்றாது காணப்படும் தெப்பக்குளமும் அனைவரையும் கவருகின்றன.

மும்மூர்த்திகள் மட்டுமல்லாமல் கோவிலுக்குள் நுழைந்தது முதல் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் அமையபெற்றுள்ளது. குறிப்பாக 18 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதிக்கு பல சிறப்புகள் உள்ளது. இங்கிருக்கும் ஆஞ்சநேயரை தரிசிக்கவே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவதுண்டு.

இக்கோவிலில் சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான கலைநயமிக்க சிற்பங்கள் ஏராளம் உள்ளன. இந்த அழகிய சிற்பங்களை காணவும், தாணுமாலயனை தரிசிக்கவும் உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினம், தினம் வருகிறார்கள்.