டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு



ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலா அணியினரும் முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க டி.டி.வி. தினகரனிடம் பணம் பெற்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அப்போது டி.டி.வி.தினகரனிடமும் டெல்லி போலீசார் 4 நாட்கள் விசாரணை நடத் தினார்கள். அதன்பிறகு டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது உதவியாளர் மல்லிகார் ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர் பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறியுள்ளனர்.

சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் தற்போது டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்