சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தம் தொடர் நஷ்டத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை


மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பஸ் போக்குவரத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகர பஸ்கள் செல்ல முடியாத குறுகலான பாதையில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையின் விரிவாக்க பகுதிகளுக்கும் ஸ்மால் பஸ்கள் விடப்பட்டன. கூலி தொழிலாளர்கள், பெண்கள் அதிகளவு இந்த பஸ்களை பயன்படுத்தி வந்தனர். ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் நகரின் உள்பகுதிகளுக்கு சென்று வர இது உதவியாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த பஸ்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததால் 200 பஸ்கள் வரை இயக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஸ்மால் பஸ்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யவில்லை. கூலி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், பெரும் பாலானவர்கள் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த தொடங்கி விட்டதாலும் கூட்டம் இல்லை.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் ஸ்மால் பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் மாநகர பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன. ஆனால் சிறிய பஸ்கள் குறைந்த அளவில் செல்கின்றன.

185 சிறிய பஸ்கள் தற்போது உள்ள நிலையில் அவற்றில் 115 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 70 சிறிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சிறிய பஸ்களில் மிக சொற்ப அளவில்தான் பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறிய பஸ்களை இயக்க ரூ.20 செலவாகிறது. ஆனால் 9 ரூபாய்தான் கிடைக்கிறது.

மேலும் சிறிய பஸ்கள் வரும்வரை மக்கள் காத்து இருப்பது இல்லை. ஷேர் ஆட்டோக்களில் ஏறி சென்று னத்து சிறிய பஸ்களும் காலியாகவே ஓடுகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பஸ்களை இயக்கிய போதும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் 70 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் சிறிய பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.