திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் உண்மை நிலவரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் உண்மை நிலவரம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!


காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எடுத்துவரும் பாரதியஜனதா கட்சிக்கு எதிரான நடவடிக்கைக்கு சில மாநில கட்சிகள் காங்கிரஸ் தலைமைக்கு ஒத்துழைப்பு தருவதற்கு யோசித்து வருகின்றன. குறிப்பாக மேற்குவங்கம் முதல்வர் மம்மா திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில கட்சியான திமுக, உத்தரபிரதேசம் மாயாவதி கட்சி பகுஜன் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா சிவசேனா, உத்தவ்தாக்ரே ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த செயலுக்கு திமுக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது என்று அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அதுமட்டும் அல்ல, திமுக காங்கிரஸ் கட்சி உறவில் நல்லிணக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதாகவும், இதன் மூலம் மத்திய அரசின் எதிர்ப்பு பார்வை திமுக மீது விழாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் திமுக தரப்பினர்கள் கருதுவதாக கூறப்படுகின்றது. இதனால் தான் ஊராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கினை திமுக தரப்பு வழங்காமல், மொத்த இடங்களிலும் அதிக இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் மூன்றாம் நிலைகளில் உள்ள பதவிகளில் மட்டும் ஒருசில இடங்கள் தேர்தல் நடந்த மாவட்டங்களில் வழங்கி விட்டு, காங்கிரஸ் கட்சிக்கு முதல்நிலை பதவிகள் வழங்காமல் திமுக தவிர்த்துவிட்டது. இந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வெகுண்டு எழுந்து “கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு திமுக தரப்பு ஆட்சேபம் தெரிவித்து டி.ஆர்.பாலு மூலம் பதிலடியாக செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். இது மட்டுமல்ல திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த போது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் போகட்டுமே என்றும் அலட்சியமாகவே கூறினார். இப்படி அறிக்கைப் போர் இரண்டு கட்சிக்கும் இடையில் நடைபெற்று வந்த வேளையில் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாடு தலைவர் அழகிரி மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி இருவரையும் நேரில் அழைத்து, அறிவுரை கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருகட்சிக்கும் இடையில் உள்ள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கூறியது. அதனை ஏற்றுக் கொண்ட அழகிரி, நாராயணசாமி, இருவரும் திமுக கட்சி தலைமை அலுவலகம் சென்று தங்கள் வருத்தத்தினை அறிவித்து, நமக்குள் இனி பிணக்கு வேண்டாம். இரு கட்சிகளும், இணைந்து செயல்படுவதுடன் கூட்டணி நீடிக்கட்டும் என்று கூட்டு அறிக்கையை வெளியிட்டு சமாதானம் செய்துக் கொண்டுள்ளது. இந்த சமாதானம் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏன் ஏற்கவேண்டும் என்கிறார்கள். மேலும், திமுக தலைவராக கருணாநிதி இருந்த பொழுது டெல்லி காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பது தெரிந்து வைத்திருந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவர் போல் தன்னை நினைத்துக் கொண்டு அலட்சியமாக நடந்துக் கொள்கிறார். திமுக உண்மையில் சிறுபான்மை மக்களுக்கு நண்பனாக இருந்து நன்மை செய்ய விரும்பினால், பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும். அதைவிடுத்து தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்துகிறார். மம்தா மேற்குவங்கத்தில் ஊர்வலம் நடத்தினால் அதில் பங்கேற்று வங்காளத்தில் எழுதி வைத்து படிக்கிறார். அதே போல் மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தரவ்தாக்ரே பதவியேற்றால் அதில் கலந்து கொள்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹேமந்தசோரன் பதவியேற்றால் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். அதே நேரம் அகில இந்திய அளவில் பாரதியஜனதா கட்சிக்கு எதிராக பிரதமர் மோடி, அமிர்ஷாவை எதிர்த்து சிறுபான்மை மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எதிர்கட்சிகள் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் போட்டால் அந்த கூட்டத்தை திமுக பங்கேற்காமல் புறக்கணிக்கிறது இது ஏன்? என்று மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சுடு, சுரணை இருக்கா வாக்கு வங்கி இருக்கா, முடிந்தால் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறட்டும் என்று பகிரங்கமாக கட்சி பொருளாளர் துரைமுருகன் விமர்சனம் செய்து செய்தியாளர்களிடம் பேசுகிறார். அதன் பிறகும் திமுக கூட்டணி தொடரும் காங்கிரஸ் தலைவர் என்று அழகிரியும், கூட்டணியை பிரிக்க குள்ளநரி சூட்சி செய்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பத்திரிகையாளர்களிடம் கூறுவதை எந்த தொண்டனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். இந்த நிலை தொடர்ந்தால் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக அணி தோல்வியை மட்டுமே சந்திக்கும் என்று மூத்த தலைவர் ஆதங்கப்படுகிறார். (தன் பெயர் வெளியிட வேண்டாம் என்பதால் குறிப்பிடவில்லை) குறிப்பாக காங்கிரஸ் கட்சி டெல்லி தலைமை ஒரு முடிவில் உள்ளது. தமிழ்நாட்டு காங்கிரஸ் பற்றிய கவலை டெல்லி அகில இந்திய தலைவர்களுக்கு இல்லை. அதனால் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாக்கூர், திமுகவில் உள்ளவர்கள் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார். தமிழ்நாடு என்றாலே, கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி விருதுநகர் தொகுதி மாணிக்தாக்கூர், கிருஷ்ணகிரி தொகுதி டாக்டர் செல்லக்குமார் மட்டுமே காங்கிரஸ் கட்சி என்று நினைக்கிறார் ராகுல்காந்தி. இங்கு இருக்கின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் குறித்து ராகுல்காந்தி மற்றும் அகமதுபட்டேல் கவலைப்படுவதில்லை. மேலும் சிதம்பரம் போன்றோர் திமுக கூட்டணியை எப்பொழுதும் காங்கிரஸ் கட்சி உறவை முறித்துக்கொள்ளக் கூடாது என்று கட்சி மேலிடத் தலைவர்களிடம் கூறிவருகிறார். இதனால் சுடுசுரணை, சுயமரியாதை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டன் முதல் தலைவர்கள் வரையில் தங்கள் கருத்துக்களை எப்பொழுதும் தெரிவிப்பதில்லை. இதனால் காங்கிரஸ் வளர்ச்சியை கருத்தில் கொள்வதில்லை. திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தல் 2019 ஆம் ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த நிமிடமே, அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூடாரம் மிகப் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு தோழமை கட்சிகள் தனிதனியாக போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. தமிழகம் மட்டும் முழு வெற்றியை பெற்றது. இப்பொழுது, அகில இந்திய அளவில் காங்கிரஸ் எடுக்கும் முயற்சியை பலகீனப்படுத்தும் விதமாக, திமுக கூட்டத்தை புறக்கணித்து எதிர்கட்சி ஒற்றுமைக்கு வேட்டு வைத்து விட்டதாக டெல்லி வட்டாரம் கருதுகிறது. திமுக - காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் அடைந்தாலும் இரண்டு கட்சி தொண்டர்களும், 2021 தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்பட்டு, அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க மாட்டர்கள் என்பது உறுதியாகும். பொறுத்திருந்து பாருங்கள் உண்மை புரியும். - டெல்லி குருஜி