டெல்லி அரசு வீட்டில் இருந்து நாளை ராகுல் வெளியேறுகிறார்





புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக குஜராத் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. எம்.பி. ஒருவர் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றால் அவரது எம்.பி. பதவியை இழக்கும் நிலை ஏற்படும். அந்த சட்டப்படி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.

எம்.பி. பதவி பறிபோனதால் ராகுல் காந்திக்கு டெல்லியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யும் படி அறிவிக்கப்பட்டது. அரசு அறிவிப்பின்படி வீட்டை காலி செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய ராகுல் காந்தியின் மனுவை நேற்று சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு நீடித்தது. இதையடுத்து அவர் டெல்லி அரசு வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி இந்தவீட்டை காலி செய்ய உள்ளதாக கூறப்பட்டது. டெல்லி அரசு வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி டெல்லியில் தாயார் சோனியா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார். இதற்காக அரசு வீட்டில் இருந்த பொருட்களை மாற்றும் பணி தொடங்கி உள்ளது. அவர் சோனியா வீட்டிற்கு குடிபோகிறார்.