ஈரோடு இடைத்தேர்தல்
நாளை ஓட்டு எண்ணிக்கை




ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 74.89 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்று வட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் வாக்கு எண்ணிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக தயார் நிலையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏற்கனவே 80 வயது கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை காலை ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. இதற்காக ஒலி பெருக்கிகள் கட்டப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன் கொண்டு வரக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. கூர்மையான ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் அடையாள அட்டை காட்டினால் மட்டுமே வேட்பாளர்களின் முகவர்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.