மதவாத அரசியலுக்கு மாற்றாக,
காந்திய அரசியல்- ராகுல்காந்தியுடன்
விவாதித்த கமல்ஹாசன்



அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். கடந்த 24ந் தேதி டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் தமது கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்து கொண்டார். செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றமைக்காக கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அப்போது நன்றி தெரிவித்தார்.

பின்னர் இருவரும் ஒரு மணி நேரத்தித்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.