மாண்டஸ் புயல் கரையை கடந்தது- வானிலை ஆய்வு மையம் தகவல்



சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், பின்னர் மதியம், காற்றாழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என்று தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்துள்ளதால் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. பல பகுதிகளில் மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.