புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்க்கிறோம் - ராகுல் காந்தி



கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை. வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்புவது தேசவிரோத செயல். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக போராடுவோம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிற்கும் சசி தரூரும், மல்லிகார்ஜூன கார்கேவும் திறமை மிக்கவர்கள். இருவருமே ரிமோட் கன்ட்ரோல் ஆக செயல்படுவார்கள் என நான் கருதவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் எந்த இடத்திலும் பா.ஜ.க. கிடையாது. இதுபோன்ற உண்மைகளை அவர்களால் மறைக்கமுடியாது. காங்கிரசும் அதன் தலைவர்களும் தான் சுதந்திரத்திற்காக போராடினர். புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது. நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பரவலாக்கப்பட்ட கல்வி முறையை நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.