150 நாட்கள் பாத யாத்திரையில் ராகுல் காந்தி
1 கோடி மக்களை சந்திக்க திட்டம்
காங்கிரசார் அதிரடி வியூகம்




நாகர்கோவில்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேச ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தொடக்க விழா வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து கன்னியாகுமரியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். அன்று மாலை அங்கிருந்து 3½ கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியுடன் டெல்லியில் இருந்து வரும் நிர்வாகிகள் 100 பேர், தமிழக நிர்வாகிகள் 300 பேர் என 400 பேர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள்.

மேலும் கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்க உள்ளனர். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி முதல் நாள் தனது பாத யாத்திரையை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிறைவு செய்கிறார். ராகுல் காந்தி அங்கு கேரவனில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 8-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார் வழியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் தனது 2-வது நாள் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். அன்று இரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்குகிறார். 9-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு சுங்கான்கடை, வில்லுக்குறி புலியூர்குறிச்சி வழியாக முளகுமூடு செல்கிறார். இரவு அங்கு தங்கும் ராகுல் காந்தி மறுநாள் 10-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு சுவாமியார் மடம் வழியாக மார்த்தாண்டம் செல்கிறார். இரவு செறுவாறு கோணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்குகிறார். 11-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு கேரளா செல்கிறார்.

குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் தீவிரமாக செய்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் இங்கேயே முகாமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி ஒரு லட்சம் பேரை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை முடித்துவிட்டு கேரளா செல்கிறார். அங்கு 7 மாவட்டங்களில் 19 நாட்கள் 450 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

கர்நாடகாவில் 21 நாட்கள் 511 கிலோமீட்டர் தூரமும், தெலுங்கானாவில் 15 நாட்கள் 366 கிலோ மீட்டர் தூரமும், மகாராஷ்டிராவில் 16 நாட்கள் 381 கிலோ மீட்டர் தூரமும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார். இந்த 150 நாள் பாத யாத்திரை மூலமாக ராகுல் காந்தி ஒரு கோடி மக்களை சந்திக்க திட்டம் தீட்டியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரசார் செய்து வருகிறார்கள். ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள அனைத்து பகுதிகளிலும் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கவும் காங்கிரசார் தயாராகி வருகிறார்கள். ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை பயணம் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி நடைபெறுவதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.