மேல்சபையில் அமளியில் ஈடுபட்ட மேலும் ஒரு எம்.பி. இன்று சஸ்பெண்டு




புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேல்சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 13 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். அவர்கள் இந்த வாரம் முழுவதும் (29-ந்தேதி வரை) சபைக்கு வர தடை விதிக்கப்பட்டது. சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்.பி.க்கள், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த 2 பேரும், இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஒருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேல்சபையில் இன்று மேலும் ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேல்-சபை கூடியது. அப்போது மேல்-சபையின் நேற்றைய கூட்டத்தின்போது காகிதங்களை கிழித்து அதை அவைத்தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய்சிங், இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.