பெண்களிடம் சில்மிஷத்தில்
ஈடுபட்டால் சிக்கிக் கொள்வார்கள்
மாநகர பஸ்களில்
அவசர உதவி அழைப்பு பொத்தான்


சென்னை மாநகர பஸ்களில் திருட்டு சம்பவம், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுதல், சில்மிஷம் செய்தல் போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாநகர பஸ்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

2,500 மாநகர பஸ்களில் அவசர உதவி பொத்தான் மற்றும் கேமராக்கள் பொறுத்தப்பட உள்ளது.

பஸ்சில் பயணம் செய்யும்போது, விபத்தோ, மருத்துவ உதவியோ தேவைபட்டாலும் இந்த பொத்தானை அழுத்தலாம்.

அதே போல திருட்டு, சில்மிஷம் நடந்தாலும் உடனே பொத்தானை அழுத்தி உதவி கேட்கலாம். பொத்தானை அழுத்தியவுடன் அலாரம் அடிக்கும். பஸ்சில் நடக்கும் சம்பவத்தை உடனே அலாட்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கும். இத்தகைய வசதி முதல் கட்டமாக 500 பேருந்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநகர பஸ்களில் விபத்து, திருட்டு சம்பவம் போன்றவை ஏதாவது நடந்தால் இந்த பொத்தானை அழுத்தினால் உடனடியாக அது தொடர்பான பிரச்சினைக்கு உதவி கிடைக்கும்.

வழிப்பறி, திருட்டு என்றால் போலீசார் சம்பவ இடத்துக்கு வருவார்கள். இதற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தலைமை அலுவலகத்தில் நிறுவப்படுகிறது. அங்கு இருந்தவாறு கண்காணிப்பார்கள்.

ஒவ்வொரு பஸ்சிலும் அவசர உதவி பொத்தான் 4-ம், கேமிரா 3-ம் நிறுவப்படுகிறது. இதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும். பஸ்சில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதனை தடுக்க இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மருத்துவ உதவி தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரும். இது போன்ற அவசர உதவிகள் பயணத்தின்போது பயணிகளுக்கு வழங்கவே இத்திட்டம் 2 மாதத்தில் செயல்படுத்தப்படும்.