காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்- அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
   


சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க. 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்க முடியாத வாதமாகும்.

மேலும், 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவிகித இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பா.ஜ.க., மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற தேர்தலில் பத்து மாவட்டங்களில் வெற்றிக் கணக்கையே தொடங்காத பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால், 2011-ல் தனித்து போட்டியிட்ட போது 2.07 சதவிகித இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34 சதவிகித இடங்களையும், நகராட்சித் தேர்தலில் 4.4 சதவிகித இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவிகித இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது.

எனவே, காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் படுதோல்வியை அடைந்திருக்கிறார்கள்.

குறிப்பாக, அ,தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிரூபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு அளித்த வாக்காளர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க.வை நிராகரித்ததைப் போல பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறார்கள். தவறான பரப்புரை மூலம் குறிப்பாக, இளைஞர்களை தவறாக வழிநடத்திய கட்சிகள் படுதோல்வி அடைந் திருப்பது மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கிற சூழல் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இனி வரும் காலங்களில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள் என்பது இந்தத் தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.