தமிழ்நாட்டிற்காக பாராளுமன்றத்தில்
குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு
மு.க.ஸ்டாலின் நன்றி!


சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை, இந்த இனத்தின் பெருமையை மிகச்சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்திக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தன்மையும், பண்பாடும், அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தியின் பேச்சு அமைந்துள்ளது.

இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் தமிழ் நெறி செல்லட்டும்.

சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப் பூர்வமான நன்றிகள்.