இலங்கையின் பொருளாதார
நிதி நிலையை சமாளிக்க
இந்தியாவை கேட்காமல்
சீனாவிடம் கடன் கேட்டு கையேந்துவதேன்?


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை அரசு தன் பண தேவைக்கு மிக அருகில் உள்ள பக்கத்து நாடான இந்தியாவை நாடாமல் சீனாவிடம் கடன் மேல் கடன் கேட்டு பெறுவது ஏன்? தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இலங்கை ஒரு கடன் வாங்கும் நாடாக வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் விண்ணை முட்டுகிறது. அன்றாடம் வாங்கும் பொருள்கள் கூட விஷம் போல் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் மக்களின் வாங்கும் சக்தியும் திறனும் குறைந்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதைய மிகப் பெரிய பண தேவையும், பொருளாதார நெருக்கடியும் காரணமாகும். இலங்கையின் இயற்கை வளங்களை மையப்படுத்தி சீனாவிடம் ஏற்கனவே ஏராளமான கடன் தொகையை பெற்று அதை திருப்பி செலுத்த இயலாத நிலையில் மீண்டும் மீண்டும் சீனாவிடம் கடன் கேட்டு இலங்கை அரசு மண்டியிடுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உள்பட இலங்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அளவுக்கு மீறி விலையேற்றத்தினால் பண வீக்கம் ஏற்பட்டு கிட்டதட்ட இலங்கை அரசு பெருமளவிற்கு தீவால் ஆகும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்ற செய்தி கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. 


உலக நாடுகளின் பார்வை இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் முந்திக்கொண்டு சீன அரசு இலங்கைக்கு நேச கரம் நீட்டுவதோடு கடன் கொடுத்து இலங்கை கடல் வழி பாதையையும் துறைமுகத்தையும் தன் வசப்படுத்தி கொண்டிருக்கிறது. கிட்டதட்ட இந்திய பெருங்கடல் மற்றும் கடல்வழி மார்க்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து அதில் சில வெற்றிகளையும் பெற்றுவருகிறது. குறிப்பாக இலங்கை திரிகோணமலை சீனா வசம் சென்றுவிட்டால் பல நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு மிகப் பெரிய இடையூராக அமையும் என்பது மிகையல்ல. 


இந்த தருணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை சில காலம் பெற்றுவந்த இலங்கை அரசு தற்பொழுது சீனாவிடம் கடன் பெறுவதையே குறியாக இருந்துவருகிறது. குறிப்பாக இலங்கை தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய நிலையில் விடுதலை புலிகளுடைய கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு மாநிலத்தை இலங்கை அரசு கைப்பற்றியதுடன் இலங்கை தமிழர்களையும் அவர்களது நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவர்கள் வசித்தப் பகுதியில் சிங்களவர்களை குடியமர்த்தி தமிழர்களுக்கு தொல்லை தருவதும் ராணுவ முகாம்களை அமைத்து சிங்களர்களை அங்கு தமிழர்கள் பகுதியில் குடியேற்றுவதும் ஒரு தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவையும், பொருள் உதவியும் இலங்கை நாடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.


இலங்கை தமிழர்களும் தங்கள் ஈழ கோரிக்கையை கைவிட்டு உலகம் முழுவதும் பரவி கிடைப்பதினால் இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சியும் பொருளாதார ஈழப்புக்கும் காரணமாகிவிட்டது. தற்போது ராஜபட்ஷே அரசு விடுதலை புலிகளை ஒழித்து தமிழர்களையும் பிரித்து ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியதினால் போர் நடவடிக்கை காலங்களில் பெருமளவு பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாத நிலைக்கு சென்றுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிப் போல் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே உள்நாட்டு பொருளாதார தேவைக்கு நிர்வாகத்தை நடத்துவதற்கு இயலாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் மேலும் சீன அரசாங்கத்திடமே கடன் கேட்டு இலங்கையின் சொத்தை அடமானம் வைப்பதிலேயே ராஜபக்சே அரசு சென்று கொண்டிருக்கிறது.

பக்கத்து நாடான இந்தியாவின் உதவியை கோராமல் சீனாவிடம் கடன் வாங்குவது எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் தீவாலாகும் நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசு இலங்கையின் மீது கவனம் செலுத்தி இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால் ஏற்படும் ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் இலங்கையை முன்னிறுத்தி சீனா தனது எஜமான ஆதிக்கத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எதிரிகள் நாடுகள் மீது செலுத்துவதற்கு ஆயத்தமாகும். இது ஒரு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் நிகழ்வாகும்.


- டெல்லிகுருஜி