ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை திமுக நழுவ விடுமா!

 

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து கள அல்லது கட்சி தலைமைக்கு விசுவாசம் ஆனவர்களையும், நம்பிக்கை கூறியவர்களையும் மக்கள் செல்வாக்கு இல்லையென்றாலும் அவர்களை வேட்பாளர்களாக்கி களத்திற்கு அனுப்புமா? என்ற கேள்வி திமுக முக்கிய பிரமுகர்களிடம் எழுந்துள்ளது. ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு மக்களுடைய மனநிலை திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும் தற்போதைய கட்சி தலைமையின் செயல்பாடுகளால் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தால் அல்லது வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலோ கட்சியினர்களை குறைசொல்லி கட்சி தலைமை தப்பித்துக் கொள்ள கூடாது எனவே எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்து கூட்டணி கட்சியினர்கள் முழு ஆதரவைப் பெற்று அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி திமுக ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அவசரப்பட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினரை நான்கு பேரை கட்சியில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு பதவிக் கொடுத்து அதன் மூலம் ரஜினி ரசிகர்மன்ற வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைப்பது இயலாத காரியம்.

இதனால் சுதாகரித்துக் கொண்ட ரஜினிகாந்த் தங்கள் ரசிகர் மன்றத்தினர் திமுகவில் சேர்வதை விட தாங்கள் விரும்புகின்ற இயக்கங்களில் சேர்ந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டு திமுகவிற்கு வரவிருந்த வாக்குகளை தடுத்து நிறுத்திவிட்டார். இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் திமுக கட்சி தலைமை செயல்பட வேண்டும் என்பது கட்சி மூத்த தலைவர்களின் விருப்பம் என்கிறார்கள். “இப்போ இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை” என்ற நிலை திமுகவிற்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது கட்சியின் தலைமையின் கடமை. கரணம் தப்பினால் மரணம் என்பதை போல் திமுகவின் எதிர்காலம் ெெதாண்டர்களிடம் உள்ள பொறுப்பை விட கட்சியின் தலைமையிடம் தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. கிராம மக்கள் சபை கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெற்று அதன் மூலம் பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுகின்ற முயற்சி என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் இருப்பது வாக்குகளை பெறுவதற்கு உதவாது என்பதையும் கட்சி தலைமை புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க திமுகவினர்கள் பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு சவால்களை சமாளித்து வெற்றிப்பெறுவதற்காக கடுமையாக உழைத்தாலும் சரியான முறையில் கட்சியினருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டால் பல வெற்றிவாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதை கட்சி தலைமை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்கள் தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவது மிக மிக அவசியம்.

- டெல்லிகுருஜி